(மன்னார் நிருபர்)
(04-09-2023)
மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் எருக்கலம்பிட்டி போலீஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டவெளி புனித வேத சாட்சிகளின் இராக்கினி ஆலயத்தில் உள்ள இரு உண்டியல்கள் உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபாய் பணம் திருடப் பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை 3ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலயம் 1544 ஆண்டு வரலாற்றுச் சிறப்பை கொண்ட ஆலயமாகும்.குறித்த காலம் தொட்டு இன்று வரை தோட்டவெளி வேத சாட்சிகளின் இராக்கினி ஆலயம் சிறிய ஒரு ஆலயமாகவே காண பாட்டு வருகிறது.
குறித்த ஆலயத்திற்கு நாடளாவிய ரீதியில் யாத்திரிகர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வந்து போவதையும் அவர்கள் ஆலய வளாக பிரதான பகுதியில் உள்ள மணல் மற்றும் எடுக்கப்படும் மனித எலும்புத் துண்டுகளையும் எடுத்து சென்று தமது வேண்டுதல்களை நிறைவேற்றும் புதுமை மிகு ஆலயமாக திகழ்கிறது.
இவ்வாறான சிறப்பை கொண்ட குறித்த ஆலயத்தின் பிரதான உண்டியல்கள் நேற்று இரவு (3) இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.
குறித்த உண்டியலில் உள்ள பணம் ஆலய தேவைக்காக கடந்த இரண்டு வருடங்களாக எடுக்காமல் விட்டு வைத்திருந்த நிலையில் குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு உண்டியல்களுக்குள்ளும் பல லட்சம் ரூபாய் பணம் இருக்கலாம் என குறித்த ஆலய காப்பாளர் மற்றும் கிராமத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு எருக்கலம்பிட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
திருட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.