நடராசா லோகதயாளன்
வடமாகாணத்தின் உட்கட்டமைப்பு மற்றும் பொது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ழான் பிரான்ஸ்வா பாசே (Jean Francois Pactet) தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் 27.09.2023 அன்று ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது வடமாகாண மக்களின் பொதுவான உட்கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் பிற வளர்ச்சி செயல்முறைகள் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் இப்பகுதி சிறுவர்களின் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் பூரண அனுசரணையை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆளுநர் பிரான்ஸ் தூதுவரிடம் விளக்கி கூறினார்.
வடமாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் பிரான்ஸ் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மை காலத்தில் பன்னாட்டு தூதர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்ச்சியாக விஜயம் செய்தி, அங்குள்ள தேவைகள் குறித்து கலந்துரையாடி உதவிகளை அளித்து வருவது கவனிக்கத்தக்கது.
அவ்வகையில் அமெரிக்க தூதர் ஜூலி சங் அம்மையார் யாழ்ப்பாணத்திற்கு நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு, அரச தரப்பு மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களயும் சந்தித்து பேசியிருந்தார்.
கனடா தூதர் எரிக் வால்ஷ் அவர்களும் தனது அண்மைய பயணத்தின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை சந்தித்து உரையாடியிருந்தார். அப்போது வடக்கில் இன்னும் விடுவிக்கப்படாத காணிகள் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புகள் தொடர்பில் அவர்கள் கலந்துரையாடியிருந்தனர். மேலும் காணி விடுவிப்பு தொடர்பிலான ஆவணங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் கனேடிய தூதரிடம் கையளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.