பாலிவுட் நடிகை நுஷ்ரத் பாருச்சா இஸ்ரேலில் சிக்கித் தவித்த நிலையில் தற்போது பத்திரமாக இந்தியா திரும்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
39வது ‘ஹய்பா இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல்’ இஸ்ரேலில் செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக பாலிவுட் நடிகை நுஷ்ரத் பாருச்சா இஸ்ரேல் சென்றிருந்தார். இந்நிலையில் காசா பகுதியில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில், 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும், 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியானதாகவும் 1,600க்கும் அதிகமானோர் காயமடைந்தததாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த போர் காரணமாக திரைப்பட விழாவுக்குச் சென்ற நடிகை நுஷ்ரத் அங்கு சிக்கியிருந்தார். அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தற்போது அவர் அங்கிருந்து பத்திரமாக மீண்டு இந்தியா வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நுஷ்ரத் பாருச்சா தரப்பில், “நுஷ்ரத் தூதரகத்தின் உதவியுடன் பத்திரமாக நாடு திரும்புகிறார். நேரடி விமானம் இல்லாததால், கனெக்டிங் விமானம் மூலம் அவர் இந்தியா திரும்புகிறார். பாதுகாப்பு காரணங்கள் கருதி தற்போது அதிகமான தகவல்களை வெளியிட முடியாது. விரைவில் அவர் இந்தியா வந்தடைவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.