நியூயார்க் நகரிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்களின் பேரணி ஒன்று தொடங்கியது. ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலை ஆதரித்த இவர்களுக்கும், இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘பாலஸ்தீனம் விடுதலை பெறும்’ என்று ஒரு தரப்பினர் முழக்கமிட, மற்றொரு தரப்பினர் ‘இது உங்களுக்கு அவமானம்’ என்று முழக்கமிட்டனர்.
இந்தப் பேரணிக்கு நியூயார்க் சாப்டர் ஆப் தி டெமாக்ரட்டிக் சோசலிஸ்ட் (என்ஓய்சி -டிஎஸ்ஏ) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. பாலஸ்தீன மக்களுடன் ‘ஒற்றுமை’ மற்றும் ‘75 ஆண்டு கால ஆக்கிரமிப்பு மற்றும் நிறவெறியை’ எதிர்க்கும் உரிமையை எடுத்துக்காட்டுவதற்காக இந்தப் பேரணி நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ‘எதிர்ப்பு நியாயமானது’ என்று பாலஸ்தீன ஆதரவாளர்கள் முழக்கிடும்போது, அதற்கு எதிரணியினர் பதிலடி கொடுக்க, அங்கு ஒரு பதற்றம் நிலவியது.
அப்போது, பேரணியில் கலந்துகொண்ட ஒருவர், இஸ்ரேலியே எதிப்பாளர்களை நோக்கி ‘நாஜி சின்னத்தினை காண்பித்தது சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. அவரின் இந்தச் செயலுக்கு பயனர்கள் பலர் தங்களின் எதிர்ப்பு மற்றும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பயனர் ஒருவர் கூறுகையில் “எல்லா இடத்திலும் வெறுப்பு பரவியிருப்பது சலிப்பு மற்றும் அருவருப்பைத் தருகிறது” என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர் “அது எதைக் குறிக்கிறது என்று யார் அவருக்குச் சொல்வார்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். என்றாலும் பல எக்ஸ் பயனர்கள், ‘ஸ்வஸ்திக்’ மற்றும் ‘ஹக்கென்க்ரூஸ்’ ஆகியவற்றின் பொருளை விளக்கியுள்ளனர். பயனர் ஒருவர், அவர் கையில் வைத்திருப்பது ‘ஸ்வஸ்திக்’ இல்லை. அது ‘ஹக்கென்க்ரூஸ்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நியூயார்க் நகர கவர்னர் இந்த பாலஸ்தீன ஆதரவு பேரணி குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “இது தார்மிக ரீதியாக வெறுக்கத்தக்கது. இஸ்ரேலியர்கள் தீவிரவாத வன்முறை தாக்குதல்களையும், கடத்தல்களையும் எதிர்கொள்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேஸ் மீதான ஹமாஸ்களின் தாக்குதலுக்கு எதிராக மேயர் எரிக் ஆடம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “தீவிரவாதக் குழுக்களின் கோழைத்தனமான செயல்” என்று தெரிவித்துள்ளார்.