5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெறுவது உறுதி என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர் 7 முதல் 30-ந்தேதி வரை சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. மேலும் டிசம்பர் 3-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதனால் இந்த மாநிலங்களில் தேர்தல் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் கலபுர்கியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது:-
ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரஸின் ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அனைத்து மாநிலங்களிலும் நாங்கள் வெற்றிபெறுவோம். ஏனெனில் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் மூலம் நாட்டில் பாஜகவுக்கு எதிரான மனநிலையே உள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிர்பலைகள் அதிகமாகி உள்ளது. அங்கு மக்கள் அனைவரும் பாஜக முதல்– அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எதிராக திரும்பியுள்ளனர். மேலும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் அரசுகள் தங்களது பணிகளை சரியாக செய்து வருகின்றன, இந்த மாநிலங்களில் எந்த வித பிரச்னையும் இல்லை.
மேலும் ஆளும் பாஜக அரசு அளித்த வேலையில்லா திண்டாட்டத்தைக் குறைத்தல், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் போன்ற எந்த வித வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
!['5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி வெறும்' - மல்லிகார்ஜுன கார்கே உறுதி](https://uthayannews.ca/wp-content/uploads/2023/10/Shri_Mallikarjun_Kharge_takes_over_the_charge_of_Union_Minister_for_Railways_in_New_Delhi_on_June_19_2013_cropped_2.jpg)
Shri Mallikarjun Kharge takes over the charge of Union Minister of Railways, in New Delhi on June 19, 2013.