இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர், ஏட்டு, போலீஸ்காரர் என அனைத்து காவலர்களுமே பெண்களே பணிபுரிகிறார்கள்.
இந்திய துணைக்கண்டத்தை பொறுத்தவரை காவல்துறையில் முதன் முதலாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1937-ம் ஆண்டு பெண்கள் சேர்க்கப்பட்டனர். அவ்வாறு சேர்க்கப்பட்ட பெண்கள் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பணிபுரிந்தனர்.
இந்நிலையில் தான், கடந்த 1973-ம் ஆண்டு அக் 27ல் பெண்கள் மட்டும் பணியாற்றும் விதமாக கேரள மாநிலத்தில் மகளிர் போலீஸ் நிலையம் முதன்முதலாக தொடங்கப்பட்டது. கோழிக்கோட்டில் தொடங்கப்பட்ட அந்த மகளிர் போலீஸ் நிலையத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திறந்துவைத்திருக்கிறார்.
அந்த போலீஸ் நிலையத்தின் முதல் சப்–இன்ஸ்பெக்டராக பத்மினியம்மா நியமிக்கப்பட்டார். போலீஸ் நிலையத்தை திறந்துவைத்த இந்திராகாந்தி, சப்–இன்ஸ்பெக்டர் பத்மினியம்மாவுக்கு தொடக்க பதிவேட்டில் கையெழுத்திட ஒரு பேனாவையும் வழங்கினார்.
அந்த மகளிர் போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டு தற்போது 50 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் அந்த போலீஸ் நிலையம் பொன் விழாவை கொண்டாடி வருகிறது.
பொன் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ரத்ததானம், புற்றுநோயாளிகளுக்கான முடிதானம், போதை மருந்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் அந்த போலீஸ் நிலையத்தின் முதல் சப்–இன்ஸ்பெக்டர் பத்மினியம்மா மற்றும் சில அதிகாரிகள் தங்களின் நினைவுகளை பகிர்ந்துள்ளனர். காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் 1995-ம் ஆண்டு போலீஸ் சூப்பிரண்டாக இருந்தபோது, பணி ஓய்வு பெற்றிருக்கிறார். அவர் கூறியதாவது:-
கோழிக்கோட்டில் உள்ள பெண்கள் காவல் நிலையம் முற்போக்கானது மற்றும் மனிதாபிமானது. நீதியை நாடும் பெண்கள் பெரும்பாலும் காவல் நிலையங்களுக்குள் ஆணாதிக்க சூழலை எதிர்கொள்கின்றனர். பலருக்கு இது ஒரு வலிமையான தடையாக இருந்தது.
குறிப்பாக கல்வி அதிகாரம் இல்லாதவர்களுக்கு பிரச்சனையாக இருந்தது. இதனால் தான் மகளிர் போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டன. புகார்களை எளிதாக பதிவு செய்வதே கோழிக்கோடு பெண்கள் போலீஸ் நிலையத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
காவல்துறையில் பெண்களுக்கான சீருடை தொடக்கத்தில் நீலநிற பார்டருன், வெள்ளை நிற புடவையாக சீருடை இருந்தது. பின்பு பச்சை நிற பார்டராக மாறியது. அதன்பிறகு பெண் போலீசாருக்கான சீருடை காக்கி நிறமாகியது. இறுதியில் பெண் காவலர்களுக்கு கால்சட்டை மற்றும் சட்டைகள் அறிமுகமாகியது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோழிக்கோடு பெண்கள் போலீஸ் நிலையத்தின் தற்போதைய பொறுப்பாளர் துளசி கூறும்போது, ‘பெண்கள் புகார் அளிக்கும் வழக்குகளை தவிர, பெண்கள் குற்றம் சாட்டப்படும் வழக்குகளையும் நாங்கள் பதிவு செய்கிறோம். பெரும்பாலான வழக்குகள் குடும்ப பிரச்சனை மற்றும் குடும்ப வன்முறை தொடர்பானவையாகவே இருக்கின்றன‘ என்றார்.
கோழிக்கோடு நகர போலீஸ் அதிகாரி பிஜூ ராஜ் கூறும்போது, ‘உண்மையில் இந்த போலீஸ் நிலையம் உலகின் முதல் மகளிர் காவல் நிலையம். முறையான ஆவணங்கள் இல்லாததால் அதிகம் அறியப்படாததாக இருக்கிறது. நாங்கள் ஆன்லைனில் தேடியபோது, இதுபோன்ற காவல்நிலையம் 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாக தகவல்கள் இருந்தது‘ என்றார்.