அன்புடையீர் வணக்கம்!
சிகாகோ தமிழ்ச் சங்கம் 1969 ஆம் ஆண்டு தமிழர் திருநாளில் இருந்து தனது அறப்பணியைத் துவங்கியது, வட அமெரிக்க மண்ணில் துவங்கப்பெற்ற முதன்மையான இந்த தமிழ்ச் சங்கம், பொன்விழா கண்டு, தமிழ் நாடு அரசின் தமிழ்த்தாய் விருது பெற்று, தமிழுக்காகத் தொடர்ந்து 54 ஆண்டுகளாக தொண்டாற்றி வருகின்றது.
2019 ஆம் ஆண்டு சிகாகோவில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப்பேரவை (FeTNA) மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி (IATR) மன்றத்துடன் இணைந்து சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS) பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை (10th World Tamil Research Conference) உலகத் தமிழ் மக்களுடன் ஒன்று கூடி முன்னெடுத்து திறம்பட நடத்தியது.
சிகாகோ தமிழ்ச் சங்கம் முன்னெடுத்து நடத்த உள்ள அடுத்த பெருநிகழ்வாக 5 ஆம் உலகத் திருக்குறள் மாநாடு (5th International Conference on Thirukkural) சிகாகோ பெருநகரில் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் 5,6,7 தேதிகளில் மூன்று நாள் (வெள்ளி மாலை – சனி – ஞாயிறு மாலை வரை) விழாவாக நடைபெற உள்ளது. இதனை ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies, Chennai) மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் (IATR – USA) ஆகியோருடன் இணைந்து வழங்க உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த மாநாட்டின் பொருண்மை “திருக்குறள் உலகப் பொது அற நூல் (Thirukkural, The world Ethic)” என்பதை உலகுக்குப் பறை சாற்றுவதே. இம்மாநாட்டில் திருக்குறளோடு பிறமொழிகளில் தோன்றிய அறநூல்கள் பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களால் பல்வேறு கோணங்களில் ஒப்பிட்டு ஆராயப்படும். இத்தகைய ஒப்பீட்டு ஆய்வின் மூலம் திருக்குறளின் தனித்தன்மை தக்க தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து நிலைநாட்டப்படுவதோடு திருக்குறளின் உலகளாவிய பரந்த தகுதிப்பாடும் அனைத்துலக அறிஞர்களும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் நிலைநாட்டப்பெறும். இதன் மூலம் திருக்குறளை உலகப் பொது நூலாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் அங்கீகரிக்க இம்மாநாட்டின் மூலம் வழிவகை செய்ய முடியும் என்ற நோக்கத்தையும் இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.
இம்மாநாட்டில் தமிழ்நாடு, மற்றும இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்கள், மலேசியா, சிங்கப்பூர் இலங்கை,மொரிசியஸ்,சீனா, ஜப்பான், தென் கொரியா, உருசியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் மற்றும் வட அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்களில் இருந்தும் தமிழ் மக்கள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.
திருக்குறளை உலகப் பொது நூலாக அங்கீகரிக்கவும், அதன் பெருமையை போற்றிடவும், அடுத்த தலைமுறைக்கு அதை எடுத்துச் செல்லவும் நாம் எடுக்கும் இந்த மகத்தான முயற்சியில் வட அமெரிக்காவில் தமிழுக்காக அரிய பல சேவைகளை செய்து கொண்டிருக்கும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் (FeTNA), அமெரிக்க தமிழ்ச் சங்கங்கள், கனடிய தமிழ்ச் சங்கங்கள், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். கலைநிகழ்ச்சிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இம்மாநாட்டிற்குத் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் (Donations, Sponsorship and Volunteer Support etc.) நல்கி வெற்றியடையச் செய்ய பேரன்புடன் அழைக்கிறோம்.
திருக்குறள் மாநாட்டிற்கான தங்களின் மேலான ஆதரவை தொடரவும் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் உதவிகளை இணைந்து செயல்படுத்தவும் தங்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை (ஒன்று அல்லது இரண்டு) கீழ்க்கண்ட படிவத்தின்(Association Form) – https://thirukkuralconference. org/associate/ மூலம் பதிவு செய்ய வேண்டுகிறோம். இப்பதிவு தங்களை நேரடியாக தொடர்பு கொண்டு மாநாட்டு விவரங்களை பகிர்ந்து கொள்ள பேரு உதவியாக இருக்கும்.
திருக்குறளுக்காக நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இம்முயற்சியில் தன்னார்வலர்களாக(Volunteers) இணைந்து தொண்டாற்ற WhatsApp / Volunteer Link மூலம் பதிவு செய்ய அன்புடன் அழைக்கிறோம்.
Links to Join: https://tinyurl.com/ ICT2024Volunteer/