நாடு முழுவதும் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளில் பணியமர்த்தப்பட்ட சுமார் 51 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி வழங்கினார். பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்ற ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியின் கீழ் பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி பேசியதாவது:- பாரம்பரிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்புத் தொழில் மற்றும் ஆட்டோமேஷன் போன்றவற்றில் பாஜக அரசு வேலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
தனது அரசும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘ரோஜ்கர் மேளா’ நடத்தி வருகிறது. இதுவரை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கான நம் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை ரோஜ்கர் மேளா அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இன்று வளர்ந்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள இந்தியா இளைஞர்களை திறன் மற்றும் கல்வியுடன் தயார்படுத்துகிறது. இந்தியாவின் பாதை மற்றும் அதன் முன்னேற்றத்தின் வேகம் அனைத்து துறைகளிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.