கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே உள்ள கன்றுபிலா விளை பகுதியை சேர்ந்த மனோ என்பவரின் மனைவி அஜி என்ற ஷர்மி(வயது 32) என்பவர் குமாரபுரம் அருகே உள்ள செங்கொடி முதலாறு பகுதியை சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் கிங்ஸ்லி(34) என்பவரிடம் ரூ. 2 லட்சத்து 43 ஆயிரத்து 500 மோசடி செய்ததாக கொற்றிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
கைதான அஜி தற்போது தற்போது தக்கலை சிறையில் உள்ளார். கைதாகி உள்ள அஜிமீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன.
எனவே அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், இந்த மோசடிக்கு உதவியதாக ரெதீஸ் என்பவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். மகளிர் சுய உதவி குழு பணத்தை தான் அதிக அளவில் அஜி மோசடி செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
பிறரின் ஆதார் கார்டை வாங்கி அவர்களின் பெயரில் கடன் வாங்கி உள்ளார். இந்த கடன் தொகை அஜியின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவைக்கப்பட்டு இருக்கிறது. குழு தலைவி என்ற பெயரில் இவரே அந்த குழுவின் வங்கி கணக்குகளை கையாண்டதால் எளிதில் இவருக்கு பணம் கிடைத்துள்ளது.
அஜியின் மோசடி தற்போது வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ள நிலையில் இந்த மோசடிக்கு வங்கி அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் உடந்தையுடன் தான் இவர் அந்த மோசடியில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.
எனவே அஜியை காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதற்காக பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் கொற்றிக்கோடு போலீசார் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே அஜி கைதாகி உள்ள தகவல் அறிந்ததும் பலரும் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்களுக்கு வருகின்றன. இதுவரை 10 பேர் வரை புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து புகார்கள் வரலாம் என கூறப்படுகிறது.