தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். எனவே அவர்கள் எந்தவித சிரமமும் இன்றி சென்று வர சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவிக்கும், அதன் படி இந்த ஆண்டுக்கான சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு 28 ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்து இருந்தது.
அதன்படி எத்தனை சிறப்புப் பேருந்துகளை, எந்தெந்த ஊர்களுக்கு இயக்குவது என்பது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் முடிந்த பின்னர் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் நவம்பர் 9-ம் தேதி முதல் இயக்கப்படும். இதில் சென்னையில் இருந்து இயக்கப்படும் 6,300 வழக்கமான பேருந்துகளுடன், கூடுதலாக 4,675 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10,975 பேருந்துகள் இயக்கப்படும். மேலும் தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்ப ஏதுவாக நவம்பர் 13-ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும், என்று கூறப்பட்டுள்ளது.