பு.கஜிந்தன்
இலண்டனின் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இணைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் இலவச கண் புரை சத்திர சிகிச்சை நிகழ்வின் ஆரம்பநிகழ்வு இன்று 30.10.2023 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆரம்பமாகியது. கண் சிகிச்சை நிலையப்பிரிவில் கண் சத்திரச்சிகிச்சை சிரேஷ்ட வைத்திய நிபுணர் எஸ்.மலரவன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சாள்ஸ் கலந்துகொண்டார்.
இவ் கண் சிகிச்சை நிலையத்தின் வைத்திய குழாமினால் இன்றையதினம் 270 இலவச கண்புரை சத்திரச்சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் இவ் சிகிச்சையானது இன்று ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 03.11 அன்றுவரை இடம்பெறவுள்ளது.
எனவே எதிர்வரும் 05 நாட்களில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கண்புரை சத்திரச் சிகிச்சை மேற்கொள்ளமுடியும் என வைத்தியசாலையின் கண் சிகிச்சை நிலையப்பிரிவின் கண் சத்திரச்சிகிச்சை சிரேஷ்ட வைத்திய நிபுணர் எஸ்.மலரவன் தெரிவித்தார்
இதில் இலண்டன் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் தலைவர் கலாநிதி பொறியிலாளர் க.சர்வேஸ்வரன் , இலங்கைக்கான தலைவர் பொறியிலாளர் த.கென்றி அமலராஜ், யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தி, மேலதிக உதவி பணிப்பாளர்கள், பதிவாளர்கள், கண் புரை சத்திர சிகிச்சை வைத்திய குழுவினர்கள், இராணுவத்தினர்கள் சிகிச்சை பெறுநர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இலவச கண்புரை சத்திரச்சிகிச்சைகளுக்கான மருத்துவ உதவிகள், மற்றும் வைத்திய குழாமினருக்கான மேலதிக கொடுப்பனவுகள் உதவிகள் என்பவற்றுக்கான நிதியுதவியினை இலண்டன் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.