ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ரெயில்கள் மோதிக் கொண்டதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு (அக் 29) பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா-கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து நின்றது.
அப்போது அதே தடத்தில், விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு மற்றொரு பயணிகள் ரெயில் சென்றது. அது, நின்றுகொண்டிருந்த விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரெயிலின் பின்புறத்தில் பலமாக மோதியது.
அதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 8 பயணிகள் பலியாகினர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தநிலையில், ரெயில்வே விபத்தில் பலியானோர் எண்ணிக்கை நேற்று 14 ஆக உயர்ந்தது.
விபத்தில் காயமடைந்தவர்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விஜயநகர் அரசுப் பொது மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
முன்னதாக அவர் விபத்துப் பகுதிக்குத்தான் செல்வதாக இருந்தது. ஆனால், அந்தப் பகுதியில் ரயில்வே பாதையை சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றுவருவதால் தான் அங்கு செல்வதால் வேலை தடைபடலாம் எனக் கருதி அவர் மருத்துவமனைக்குச் சென்றதாக முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு இல்லை
கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் ரயில்கள் பாதுகாப்புக்காக முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான ‘கவச்’-ஐ அறிவித்தது. இதற்காக மத்திய அரசின் ரிசேர்ச் டிசைன்ஸ் அண்ட் ஸ்டாண்டர்ட்ஸ் ஆர்கனைசேஷனுக்கு மூன்று இந்திய நிறுவனங்கள் இதனை உருவாக்கிக் கொடுக்க, இந்திய ரயில்வே அதனை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. கவச் என்ற சொல் கவசம் – பாதுகாப்பு என்பதைக் குறிப்பதாகும்.
கவச் தொழில்நுட்பமானது லோக்கோ பைலட்டுகள் என்றழைக்கப்படும் ரயில் ஓட்டுநர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும். எஸ்பிஏடி, சிக்னல் பாஸிங் அட் டேஞ்சர் எனப்படும் இந்த சமிக்ஞையானது ஒரே மார்க்கத்தில் இரு ரயில்கள் வந்தால் எச்சரிக்கும். மிகுந்த அடர்த்தியான பனிமூட்டம் இருக்கும்போது எதிரே ரயில் வந்தால் அலர்ட் செய்யும். எச்சரிக்கை செய்வதோடு மட்டுமல்லாமல், இது தானாகவே பிரேக் அப்ளை செய்து ரயிலின் வேகத்தை மட்டுப்படுத்தி விபத்துக்கான சாத்தியத்தை குறைக்கும்.
இந்நிலையில், ஆந்திராவில் விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் கவச் தொழில்நுட்பம் இல்லை என்று ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், பாலசா பயணிகள் ரயிலானது மத்திய லைனில் சென்று கொண்டிருந்தது. அது வேகத்தைக் கட்டுப்படுத்தியிருந்தது. அந்த நேரத்தில் ராயகடா பயணிகள் ரயில் சிக்னலைக் கடந்து பின்னால் இருந்து பலாசா ரயில் மீது மோதியுள்ளது. இதில் பலாசா ரயிலின் மூன்று பெட்டிகளும் இன்ஜினும் ராயகடா ரயிலின் இரண்டு பெட்டிகளும் சேதமடைந்தன. இந்த ரயில் தடம் சென்னை – கொல்கத்தா ரயில் செல்வதற்கான முக்கியப் பாதை என்பதால் அந்தப் பாதையை சீரமைப்பதில் அதிகாரிகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்” என்றார்.
ஒடிசாவில் கடந்த ஜூன் மாதம் மிக மோசமான ரயில் விபத்து நடந்தது. மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட் விபத்தில் 260-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயின. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் நடந்த 3 மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து கருதப்படுகிறது. இந்த ரயில் விபத்து நடந்த பகுதியில், ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் தடுக்கும் ‘கவச்’ என்ற தொழில்நுட்பம் இல்லை என்ற தகவல் வெளியாகி சர்ச்சையானது.
அப்போதே பல தரப்பிலிருந்தும் ரயில்வேயில் கவச் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது பற்றி கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், ஆந்திராவில் நடந்த விபத்தில் சிக்கிய இரண்டு ரயில்களிலுமே கவச் இல்லை என்பது தெரியவந்துள்ளது.