மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் தங்கள் படகையும் விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து அங்கேயே தங்கியுள்ளனர்.
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்தவர், மைக்கேல் பாக்கியராஜ். இவரது படகில் அதே ஊரைச் சேர்ந்த மைக்கேல்ராஜ், மகேஷ்குமார் பரமசிவம், ஆதிநாராயணன், வேம்பாறைச் சேர்ந்த அதிசய பரலோக திரவியம், அந்தோணி செல்வசேகரன் பரலோக பிரான்சிஸ், அந்தோணி அன்சல் கிறிஸ்டோபர், சிலுவைப்பட்டி அன்புசூசை மிக்கேல், ராமநாதபுரம் மணி, சக்தி, ராமேஸ்வரம் உதயகுமர், விக்னேஷ், மதுரை மாதேஷ்குமார் துரைப்பாண்டி ஆகியோர் கடந்த 1ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு 23ஆம் தேதி மாலத்தீவு கடல் வழியாக கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அத்துமீறி தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி, 12 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்த, கடற்படையினர் அளித்த தகவலின்பேரில், மீனவர்கள் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். மேலும், 12 பேரையும் மீட்க மத்திய- மாநில அரசுகள் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்களும், விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
தூத்துக்குடி எம்பி கனிமொழி பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, 12 பேர் விடுதலைக்கு மத்திய அரசை வற்புறுத்தியிருப்பதாக கூறினார். முதல்&அமைச்சர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி 12 மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தினார்.
இந்த நிலையில் மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
அதேசமயம் பறிமுதல் செய்த விசைப்படகை விடுவிக்க மாலத்தீவு அரசு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே, விசைப்படகை விடுவித்தால்தான் சொந்த ஊர் செல்வோம் எனக் கூறி மீனவர்கள் மாலத்தீவிலேயே தங்கியுள்ளனர். விசைப் படகையும் சேர்த்து மாலத்தீவு அரசு விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.