திருவள்ளூர் மாவட்டம் கொமக்கம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன். கூலித் தொழிலாளியான இவர் டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பேரம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து கூவம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்போது, உச்சபட்ச மது போதையில் வந்த குருநாதன், அந்தப் பேருந்தின் குறுக்கே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்தை இங்கிருந்து எடுக்கக் கூடாது என பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தார்.
இதனையடுத்து குறுக்கே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை இடிக்காமல் இடது புறமாக பேருந்தை ஓட்டுநர் எடுக்க முயன்றார். உடனே குடிமகன் குருநாதன், “நான் வண்டியை எடுக்கக்கூடாதுன்னு சொன்னதுக்கு அப்புறமும் வண்டியை எடுக்குறியா.. இரு வர்றேன்..” எனக் கூறிக்கொண்டே, அருகில் கிடந்த கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு சென்று பேருந்தின் முன் பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினார்.
மேலும், ஓட்டுநர் இருக்கை அருகே இருந்த கண்ணாடி, பின்பக்க கண்ணாடி, பேருந்தின் கதவு கண்ணாடி என அனைத்து கண்ணாடிகளையும் அடித்து உடைத்தார்.
குருநாதனின் இந்தச் செயலால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். எங்கே உள்ளே வந்து தங்களையும் கட்டையால் அடித்து விடுவாரா என பயந்துபோய் அமர்ந்திருந்தனர்.
இதையடுத்து, பஸ்ஸின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடிகளையும் குடிமகன் குருநாதன் அடித்து நொறுக்கிய நிலையில், பஸ்ஸில் இருந்த முதியவர்கள், பெண்கள் அலறத் தொடங்கினர். ஒரு இளைஞர் வந்து குருநாதனின் சட்டையைப் பிடித்து இழுத்து கட்டையை பறித்தார். பின்னர், பொதுமக்கள் அந்த நபரை அடித்துத் துவைத்தனர்.
இந்தச் சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட, அது தீயாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடிகளை அடித்து உடைத்த குரு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்தச் சம்பவம், நவம்பர் 2ஆம் தேதி நடந்தது. இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அரசுப் பேருந்தை நொறுக்கிய குருநாதனை இன்று (நவ 4) கைது செய்தனர்.
மாயி படத்தில் வடிவேலு குடிபோதையில் இதுபோன்று பஸ்சை மறித்து கலாட்டா செய்து விட்டு மனைவியிடம் (கோவை சரளா) தர்மஅடி வாங்கும் சம்பவத்தை மேற்கண்ட சம்பவம் நினைவூட்டியது.