நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (நவ 7) தனது 69-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைகொண்டவர் கமல்ஹாசன். அவருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழிய பல்லாண்டு” எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திரையுலக கனவுகளோடு வருபவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாத் தரப்பினரையும் ரசிக்க செய்யும் உலக நாயகன் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், கலைஞானி என்று போற்றப்பட்ட கமல் சார், இந்திய திரையுலகின் முக்கிய அடையாளம் என்பது நமக்கெல்லாம் பெருமை. கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, அரசியல் – சமூகநீதி தளங்களிலும் அவரது பங்களிப்பு போற்றுதலுக்குரியவை” எனப் பதிவிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், தமிழ்த் திரையுலகின் சாதனைச் சிகரமான கமல்ஹாசன் இன்று அவரது 69-ஆம் பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் தமிழக மக்களுக்கு அவர் நீண்ட காலம் பணியாற்ற எனது வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டுள்ளார்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை நன்கொடையாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.