நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவிய நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏஐ தொழில்நுட்பம் வழியாக நடிகர், நடிகைகளின் படங்களை மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்வதை பலரும் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. தமிழ், தெலுங்கு இந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். இவரது வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வந்தது.
அது ராஷ்மிகாவின் போலி வீடியோ என்று கண்டறிந்தபோது, சுமார் 15 மில்லியனுக்கும் மேலான பேர் அதை பார்த்திருந்தனர் எனக் கூறப்படுகிறது.
அது, ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ் இந்திய பெண்ணின் வீடியோ என்றும், ஏஐ டீப் பேக் (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா மந்தனா போன்று மாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்தது.
இதையடுத்து, அமிதாப் பச்சன் அந்தப் போலி வீடியோவை பகிர்ந்து, ‘இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். மேலும், பல கண்டன குரல்களும் எழுந்தன.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தின் பக்கத்தில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு இணைய பயன்பாட்டாளர்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தி வருகிறது. ஐடி விதிகளின்படி சமூக வலைதளங்கள் உண்மையான பதிவு பகிரப்படுகிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். தவறானவை பகிரப்பட்டால் 36 மணி நேரங்களில் அவை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சமூக ஊடகங்கள் விதிகளை மதிக்காவிட்டால், அவர்களுக்கு எதிராக விதி 7 பயன்படுத்தப்படும். ஐபிசி விதிகளின் கீழ் அந்த நபர் குறிப்பிட்ட சமூக வலைதளம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். டீப் பேக் வீடியோக்கள் மிகவும் மோசமானவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே நடிகை ராஷ்மிகா தனது எக்ஸ் தள பதிவில், “இணையத்தில் பரவிவரும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோ குறித்து பேசுவதற்கு வேதனையாக உள்ளது. இன்று தொழில்நுட்பம் இப்படி தவறாக பயன்படுத்தப்படுவதை பார்க்கும்போது எனக்கு மட்டுமல்ல, அவற்றின் தீங்குகளுக்கு ஆளாகக்கூடிய ஒவ்வொருவருக்கும் பயம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும் இருக்கும் எனக்கு பாதுகாப்பு அளிக்கும் எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனினும், இதுபோன்று நான் பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும்போது நடந்திருந்தால், இதை எப்படி சமாளிப்பது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இதுபோன்ற அடையாளத் திருட்டால் நம்மில் பலரும் பாதிக்கப்படுவதற்கு முன், இவற்றைப் பற்றி இந்த சமூகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்று ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலுக்கு தமன்னா ஆடிய ஒரு ரீல்ஸ் வீடியோவில் சிம்ரனின் முகத்தை வைத்து ‘டீப் பேக்’ என்ற ஏஐ தொழில்நுட்பம் மூலம் தத்ரூபமாக உருவாக்கப்பட்ட வீடியோ வைரலானது குறிப்பிட த்தக்கது.