புத்தளம் கல்வி வலையத்தை சேர்ந்த ஆண்டிமுனை தமிழ் மகாவித்தியாலயம், உடப்பு தமிழ் மகா வித்தியாலயம், புத்தளம் இந்துதமிழ் மகா வித்தியாலயம், புனித மரியாள் தமிழ் வித்தியாலயம், கற்பிட்டி அ.றோ.க தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த ,க.பொ.த உயர்தர பரீட்சையை சென்ற வருடம் எழுதிய 35 மாணவர்கள் நவம்பர் 2 முதல் நவம்பர் 5 ,2023 வரை நடைபெற்ற இத் தலைமைத்துவ பயிற்சி பட்டறையில் பங்கு பற்றியிருந்தார்கள்.இது வவுனியா மரக்காரம்பளையில் அமைந்துள்ள மாகாண தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையத்தில் நான்கு நாட்கள் கொண்ட வதிவிட பயிற்சியாக நடைபெற்றது.
இதுவரையில் பாடசாலை ரீதியில் ஒட்டு மொத்தமாக வெளிக்கொணரப்படாத மாணவர்களது நடிப்புத் திறன் ,வாசிப்பு திறன், எழுத்துத்திறன், கவித்திறன்,விவாதத் திறன், முன்வைப்பு திறன் ,முன் வருகைத் திறன், ஏற்றுக்கொள்ளும் திறன் மற்றும் உடல்,உள ஆரோக்கிய மேம்பாடு என்பன தூண்டப்படவும் துலங்கவும் இது ஒரு வாய்ப்பாக மாணவர்களுக்கு அமைந்தது.
வளமான வளவாளர்களின் விரிவுரைகள் அற்ற செயற்படுசார் பயிற்சிகள், முழுமைப்படுத்தப்பட்ட விடய ஒழுங்கமைப்புகள், மாற்றத்தை விரும்பும் இளையோருக்கான காணொலிகள் அவற்றை ஒட்டிய கருத்துப்பரிமாறல்கள் மாணவர்களுக்கு புதிய அனுபவத்தை அளித்தது.
மிக முக்கியமாக குறித்த இளையோரிடமிருந்து வளவாளர்கள் எதிர்பார்க்கும் கருத்துக்கள் ,பதில்கள் மாறுதல்கள் சமுதாய சிந்தனைகள் போன்றன தோற்றம் வரும் வண்ணம் அமைந்த நிகழ்வுத் திட்டமிடல்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தது. மேலும் அவர்களின் திறன்களை வெளிக்கொணரும் விதமாக Talented Show நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இப்பயிற்சியில் ஒழுங்கமைத்த நேர்முகத் தேர்வு புதிய அனுபவமாக இருந்தது மட்டுமன்றி ஒவ்வொரு மாணவரும் தனக்கான சுயவிருத்தி திட்டம் (Self DevelopmentPlan) ஒன்றை வடிவமைத்தமை இப்பயிற்சி நெறியின் சிறப்பை மேம்படுத்தியது எனலாம்.
இப்பயிற்சியானது அனைத்து உலக மருத்துவ நல அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி திரு சு கிருஸ்ணகுமார் அவர்களின் நெறிப்படுத்தலில் Vision Global Empowerment- USA அமைப்பின் வளவாளர்கள், வவுனியா வடக்கு கல்வி வலய உடற்கல்வி உதவி க்கல்வி பணிப்பாளர், மனவளக்கலை பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்சி மத்திய நிலைய முகாமையாளர் போன்றோர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தார்கள்.
இப்பயிற்சி நெறியில் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம் நாயக்கர் சேனை தமிழ் வித்தியாலயம், அதிபர்களுடன் ஆசிரியர்களும் கலந்து கொண்டு மாணவர்களின் நலன்களை கவனித்து பயிற்சி சிறப்புற நடைபெற உதவி புரிந்தமை பாராட்டுதலுக்குரியது.