கேரளாவில் உள்ள கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் வழியாக தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோழிக்கோடு விமான நிலையத்தில் ஒன்றேகால் கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற ஒரு பயணி பிடிபட்டார். இந்த நிலையில் தோகாவிலிருந்து கொச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணூரைச் சேர்ந்த சாலி(33) என்ற இளம் பெண்ணின் பேக்கை பரிசோதித்த போது அதில் ஒரு முக கிரீம் டப்பா இருந்தது.
சந்தேகம் அடைந்த அதிகாரிகள் கிரீமை அப்புறப்படுத்தி பார்த்தபோது அதில் 640 எடை கொண்ட நான்கு தங்க வளையங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை கைப்பற்றிய அதிகாரிகள்
சாலியை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 34 லட்சம் என்று சுங்கத்துறையினர் தெரிவித்தனர். இவர் இத்தாலியில் இருந்து தோகா வழியாக கொச்சிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.