கேரள மாநிலத்தின் ஆலுவா மாவட்டம் முக்கம் பகுதியில் வசித்து வந்த பீகார் மாநில தம்பதியின் 5 வயது மகள் கடந்த ஜுலை 28ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை மாயமான சிறுமியை தேடி வந்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அதேபகுதியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி அஸ்பக் ஆலமிடம் காவல்துறை விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அஸ்பக் ஆலம் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும், சிறுமியின் உடலை ஆலுவா மார்க்கெட்டிற்கு பின்புறம் உள்ள குப்பைக்கிடங்கில் வீசியுள்ளார். இதனை தொடர்ந்து 20 மணி நேர தேடுதலுக்கு பின் சிறுமியின் உடலை காவல்துறை மீட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே, 5 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற அஸ்பக் ஆலம் மீது பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் அஸ்பக் ஆலம் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளி அஸ்பக் ஆலமிற்கு நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்தது. குற்றவாளி அஸ்பக் ஆலமிற்கு 5 ஆயுள் தண்டனைகளையும் நீதிமன்றம் விதித்தது. குற்றவாளி 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.