கேரள மாநிலம் தெற்கு வயநாடு வனப்பிரிவுக்கு உட்பட்ட கல்பெட்டா வடுவாஞ்சல் அருகே உள்ள கடசேரியை சேர்ந்த விவசாயி ஹம்சா. இவர் தனது வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். அவற்றை அடைப்பதற்கு பெரிய கூண்டு வைத்திருந்தார்.
இரவு நேரத்தில் திடீரென கோழிகள் அனைத்தும் இறக்கைகளை படபடவென அடித்து பயத்தில் சத்தம் கேட்டது. இதனால் ஹம்சா மற்றும் அவரது பக்கத்து வீட்டினர் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது கோழிக் கூண்டுக்கு ள் சிறுத்தைப்புலி ஒன்று படுத்துக்கிடந்தது. அதனைப்பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த சிறுத்தையால் எழுந்திருக்கவும் முடியவில்லை. சத்தமிடவும் முடியவில்லை. மிகவும் சோர்வுடன் காணப்பட்டது.
கோழிகளை வேட்டையாடுவதற்காக கூண்டுக்குள் புகுந்த அந்த சிறுத்தையால் கூண்டை விட்டு வெளியே வரக்கூட முடியவில்லை. கோழிக் கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியிருப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று கூண்டுக்கு ள் இருந்த சிறுத்தையை பிடித்தனர். பின்பு மற்றொரு கூண்டின் மூலம் அதனை அங்கிருந்து கொண்டு சென்றனர்.