மோசடி புகாரில் நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சேலத்தில் எம்.எஸ்.எம்.இ. (சிறுகுறு தொழில்) புரமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் சார்பில் நிறுவன உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியானது கடந்த வாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன், தேசிய செயலாளரான பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த துஷ்யந்த் யாதவ், தமிழகத்தின் தலைவராக இருந்த சவுத்ரி (நமீதாவின் கணவர்) ஆகியோர் கலந்து கொண்டு சிறு, குறு தொழில் உரிமையாளர்களுடன் ஒன்றிய அரசின் கடன் விவகாரம் குறித்து பேசினார்கள்.
இதில் சிறப்பு அமைப்பாளராக நமீதாவும் கலந்து கொண்டிருந்தார். கூட்டத்தின் பேனரில் இந்திய அரசின் அசோக முத்திரை பயன்படுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே, அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், தொழில் செய்ய கடன் பெற்றுத் தருவதாகக் கூறி பலகோடி ரூபாய் ஏமாற்றியதாகவும் பைனான்சியர் கோபால்சாமி என்பவர் முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் மீது சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் கீழ் முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.
மேலும் தமிழக தலைவர் பதவியை வாங்குவதற்காக நமீதாவின் கணவர் சவுத்ரி 4 கோடி ரூபாய் வரை பெற்றதாக கோபால்சாமி தனது புகாரில் தெரிவித்திருந்தார். அதன் பேரில் நமீதாவின் கணவர் சவுத்ரி, பாஜக ஊடகப் பிரிவு செயலாளரும், முத்துராமன் உதவியாளருமான மஞ்சுநாத் ஆகிய இருவருக்கும் விசாரணைக்கு ஆஜராக சேலம் சூரமங்கலம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பாஜக ஊடகப்பிரிவு செயலாளர் மஞ்சுநாத் மூலமாகவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 17ம் தேதி மதுரையில் நடைபெற்ற விஸ்வகர்மா திட்ட தொடக்கவிழாவில் மத்திய அமைச்சருடன் முத்துராமன் கலந்துகொண்டதும் தெரியவந்துள்ளது.
சேலம் சூரமங்கலம் போலீசார் மஞ்சுநாத்திடமும், சவுத்ரியிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.