மத்திய அரசு பறித்து வரும் உரிமைகளை மீட்டெடுப்போம் என்று, கன்னியாகுமரியில் மோட்டார் சைக்கிள் வாகன பிரசாரதை தொடங்கி வைத்து, அமைச்சர் உதயநிதி பேசினார்.
திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர் 17ம் தேதி) நடைபெறுகிறது. இந்த மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்த திமுக இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்து வருகிறார்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டுக்கான ஆயத்த பணிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை இளைஞரணி நிர்வாகிகள் மூலம் நடத்தி வருகிறார்.
இதன் அடுத்த கட்டமாக இப்போது இளைஞரணி நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இருசக்கர வாகனப் பிரச்சாரத்தை கன்னியாகுமரியில் இன்று (நவ 15) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இரு சக்கர வாகன பேரணி பிரச்சார தொடக்க விழா கன்னியாகுமரி திருவேணி சங்கமத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் அப்போது அவர் பேசியதாவது :
நாம் இங்கு இரண்டாவது மாநில மாநாடு பிரச்சார பயணத்திற்கு கூடியிருக்கிறோம். இந்த மாநில மாநாட்டிற்கு பெயர் மாநில உரிமைகள் மீட்பு மாநாடு என்பதை நீங்கள் உணர வேண்டும். ஒவ்வொரு உரிமையாக ஒன்றிய அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டும். குரல் கொடுக்க வேண்டும். என்பதற்காகத்தான் சேலத்தில் வரும் டிசம்பர் மாதம் 17ம் தேதி இரண்டாவது மாநில இளைஞரணி மாநாட்டை நடத்த உள்ளோம்.
நான் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட இதுவரை கழக 40 மாவட்டங்களுக்கு செயல் வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். பேரணியில் பங்கேற்றுள்ள இளைஞர்களை பார்க்கும்போது கம்பீரமாக மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கருப்பு சிவப்பு, டீ சர்ட் அணிந்து போர் வீரர்கள் போல் காட்சியளிக்கிறீர்கள். நீங்கள் அடுத்த 15 நாட்களில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரையும் நீங்கள் சந்திக்க போகிறீர்கள் .
திமுக வரலாறு, கல்வி உரிமை பற்றி சொல்லப் போகிறீர்கள். முக்கியமாக நீட் தேர்வு, அந்த விளக்கமும் உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும். 50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்து இயக்கத்தில் இணையதளத்தில் இதுவரை 9 லட்சம் பேர் கையெழுத்து போட்டு உள்ளனர். போஸ்ட் கார்டில் 10 லட்சம் பேர் கையெழுத்து பதிவு செய்துள்ளனர்.
ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த வரி தொகை 25 ஆயிரம் கோடி. திரும்பி வந்தது ரூ. 2 ஆயிரம் கோடி. இப்படி ஒவ்வொரு மாநில உரிமை ஒவ்வொன்றையும் ஒன்றிய அரசு பறித்து வருகிறது. இதையெல்லாம் மீட்கத்தான் நம்முடைய மாநாடு நீங்கள் 4 மண்டலங்களாக பிரிந்து 234 தொகுதிகளிலும் நீங்கள் சென்றடைய போகிறீர்கள். வாக்காளர்களை, மக்களை சந்திக்கப் போகிறீர்கள்.
எனவே உங்களுடைய பயணம் சிறப்பாக அமைய வேண்டும். குட்டிக்கதை சொல்ல விரும்புகிறேன். ஒரு பூட்டப்பட்ட பூட்டு, ஒரு சுத்தியல், ஒரு சாவி உள்ளது. சுத்தியல் அந்த பூட்டை திறப்பதற்காக அதன் தலைப்பகுதியில் ஓங்கி ஓங்கி அடிக்கிறது. ஆனாலும், பூட்டு திறக்கவில்லை. ஆனால், சாவியோ மிகவும் சுலபமாக பூட்டை திறந்து விட்டது. நான் உன்னை விட வலிமையாக இருக்கிறேன். என்னால் பூட்டை திறக்க முடியவில்லை. ஆனால் நீ திறந்து விட்டாய் என சாவியிடம் சுத்தியல் கேட்டது.
அதற்கு நீ பூட்டை மதிக்காமல் காயப்படுத்த நினைக்கிறாய். ஆனால், நான் அந்த பூட்டை மதித்து உள்ளே சென்று இதயத்தை தொட்டேன். அதனால்தான் என்னால் திறக்க முடிந்தது என சாவி கூறியதாம். இந்த இடத்தில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பூட்டு என்பது தமிழ்நாடு, சாவி என்பது திமுக இயக்கம் மற்றும் நமது தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால், சுத்தியல் என்பது ஒன்றிய பாஜக அரசு. ஒன்றிய பாஜக அரசு இப்படித்தான் தமிழ்நாட்டில் ஒவ்வொன்றையும் திணிக்க வேண்டும் என்று தலையில் இடித்துக் கொண்டிருக்கிறது.
எவ்வளவுதான் தமிழ்நாட்டுக்குள் ஒன்றிய பாஜக அரசு நுழைய முயற்சி செய்தாலும் அதனால் நுழையவே முடியாது. திராவிட கொள்கை என்ற அந்த சாவியை நம்முடைய கலைஞரும், பெரியார், அண்ணா ஆகியோரும் நம்முடைய தலைவருடைய கையில்தான் இந்த சாவியை கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள். இதனை மக்களிடம் கொண்டு நீங்கள் சேர்க்க வேண்டும்.
திமுக ஆட்சி அமைந்து ஒவ்வொரு திட்டம், ஒவ்வொரு நாளும் நமது தலைவர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.
மகளிர் கட்டணம் இல்லாத பேருந்து பயண வசதி. இதன் மூலம் ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் குறைந்தது ஆயிரம் ரூபாய் சேமிக்கிறாங்க. வருஷத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் சேமிக்கிறார்கள்.
அடுத்து புதுமைப்பெண் திட்டத்தில் கல்வி ஊக்கத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்காக அரசு பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் 31,000 பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள்.
கடந்த செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், டாக்டர் கலைஞர் பெயரில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மாதம் ரூ. 1000 வழங்கக்கூடிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இதுவரைக்கும் ஒரு கோடியே 13 லட்சம் பேர் பயன் பெறுகிறார்கள்.
இவையனைத்தையும் நீங்கள் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். இந்த பிரச்சார பயணத்தில் செல்லும் உங்களுடைய பாதுகாப்பு முக்கியம். அனைத்து போக்குவரத்து விதிகளையும் பின்பற்றி மிகவும் பாதுகாப்பாக செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் திமுக மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் அமைச்சர் தமிழரசி, சுரேஷ் ராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.