“இனி எனது திரைப்பயணம் வேறு மாதிரி இருக்கும்” என்று நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான திரைப்படம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படத்தில் தனது வழக்கமான பாணியிலிருந்து சற்று மாறுபட்ட தோற்றத்தில், லாரன்ஸ் களம் இறங்கியுள்ளார். இதனால் நடிகர்கள், இயக்குநர்கள் என பலரின் பாராட்டையும் அவர் பெற்று வருகிறார். மக்கள் மத்தியிலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இதையடுத்து நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் தாண்டிக்குடி மக்களோடு சேர்ந்து மதுரை செல்லூரியில் உள்ள திரையரங்கில் தங்களின் படத்தை கண்டுகளித்தனர். பின் செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர் படத்திற்கு வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.