தூத்துக்குடியில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாமில் 94 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4.89 கோடி கல்விக்கடன் ஆணைகளை கனிமொழி எம்பி வழங்கினார்.
தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள வ.உ.சி. கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், அனைத்து வங்கிகளுடன் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாமில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆகியோர் முன்னிலையில் 94 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4.89 கோடி கல்விக்கடன் ஆணைகளை வழங்கினார்.
இம்முகாமில் அவர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவிகளிடையே உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்காக கல்வி நிறுவனங்களையும், வங்கியாளர்களையும் ஒருங்கிணைத்து இன்றைய தினம் இந்த கல்விக்கடன் முகாம் நடைபெற்று வருகிறது.
உங்களது கனவுகளுக்கும், பொருளாதார வசதிக்கும் இடையே இருக்கக்கூடிய இடைவெளியானது உங்களது கனவுகளை நிறுத்திவிடக்கூடாது என்பதற்காகத்தான் இதுபோன்ற கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது. பெற்றோரின் பொருளாதார வசதி குறைவாக இருப்பதால் அவர்களுக்கு நமது கல்வி செலவு சுமையாக இருக்க விரும்பவில்லை என்ற நிலை யாருக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காத்தான் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. இந்த முகாமிற்கு 14 வங்கிகள் வருகை தந்து உங்களுக்கு கல்வி கடன் வழங்க வந்துள்ளார்கள்.
உங்களுக்கு கல்வி கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. கல்வி கடனை நீங்கள் 6 மாதம் முதல் ஒரு வருடம் கழித்து வேலைக்கு சென்ற பின்பு கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப செலுத்தலாம். எனவே நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் உங்களது கனவுகளை அடைய வேண்டும். உங்களது கனவுகளை அடைந்து வாழ்க்கையில் சிறந்த இடத்திற்கு செல்ல வாழ்த்துக்கள்.
இவ்வாறு .கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.