திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி-அம்பாள்கள் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கொட்டகைகளில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் விரதம் இருந்து வருகின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில் கடற்கரையில் எழுந்தருளும் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.