மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக துவங்கியது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, வடகிழக்கு மாநிலமான மிசோரம் ஆகியவற்றின் சட்டசபை பதவி காலம் முடிவடைவதை அடுத்து, இந்த ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மிசோரமில் கடந்த 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. நக்சல் பாதிப்புக்கு ஆளான சத்தீஸ்கரில் உள்ள 20 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக கடந்த 7ல் தேர்தல் நடந்தது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இங்கு, 15 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்து, 2018ல் ஆட்சியை பிடித்த காங்கிரசுக்கும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க நினைக்கும் பா.ஜ.வுக்கும் இடையே பிரதான போட்டி நிலவுகிறது.
ஓட்டுப்பதிவு நடக்கும் 70 தொகுதிகளில், 958 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுஉள்ளனர். மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஆளும் பா.ஜ. மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவும் சூழலில், மொத்தம் 2,533 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இரு கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் போட்டியில் குதித்துள்ளன. மாநிலத்தில் உள்ள ஐந்து கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற உள்ளனர். தேர்தலை ஒட்டி இரு மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த, தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. தேர்தலில் பதிவான ஓட்டுகள், அடுத்த மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.