வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கேள்வி.
(மன்னார் நிருபர்)
(20-11-2023)
நல்லிணைக்கு அடிப்படையில் இந்திய மீனவர்கள் 22 பேரையும் விடுவிக்க ஜனாதிபதி உத்தர விட்டிருந்தால் தென் பகுதியில் உள்ள எமது மீனவர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு அங்கு சிறைகளில் வாடுகிறார்கள்.அவர்களையும் விடுவிப்பதற்கு ஜனாதிபதி இனியாவது முயற்சி எடுக்க வேண்டும். என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (20) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (17) இரவு யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு 2 இந்திய படகுகளும் 22 மீனவர்களும் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இந்திய நிதி அமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்க அவர்களின் பணிப்புரையின் கீழ் நல்லிணக்க அடிப்படையில் அவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்தின் ஊடாக தீர்வை நாங்கள் வலியுறுத்தி இருக்கின்ற நிலையில் இந்த சட்டம் அவ்வாறு நடைமுறையில் இருக்கும் நிலையில் இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமாக நுழைந்து இலங்கையில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலையை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது இலங்கை கடற்படை இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து கைது குறித்த இந்திய மீனவர்கள் 22 பேரையும் செய்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மீனவர்களை எவ்வாறு ஜனாதிபதி விடுவிக்க முடியும்.?. அவ்வாறான அதிகாரம் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகின்றது.
ஒரு சட்டத்தின் ஊடாக வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி சட்டவிரோத செயற்பாட்டை செய்கிறவர்களை வெறுமனே நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தாமல் அவர்களை விடுவிக்க முடியுமா? என்ற கேள்விக்கு எழுகின்றது.
அவ்வாறு விடுவிக்கும் முடியும் என்றால் நாளை பிரதமருக்கு அல்லது கடற்றொழில் அமைச்சருக்கும் அவ்வாறு அதிகாரம் செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.
வடபகுதி மீனவர் குறிப்பாக மன்னாரில் இருக்கும் மீனவர்கள் கிளிநொச்சி கடல் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு அவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் தாண்டி மீன் பிடியில் ஈடு படுவதாக கூறி அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இன்று வரை விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இன்னும் அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்தில் செல்வது கூட ஒரு தடுக்கப்பட்ட விடையமாக இருக்கும் போது நாடு விட்டு நாடு வந்து எமது கடற்பரப்பை சூரையாடி சட்டவிரோத மீன்பிடி யை செய்கிறவர்களை எவ்வாறு ஜனாதிபதி விடுவிக்கலாம்?.
நாங்கள் தொடர்ச்சியாக இந்த போராட்டங்கள் இந்திய மீனவர்களின் வருகை நிறுத்துங்கள். அவர்களின் வருகையே இல்லாமல் ஆக்குங்கள் என்று போராடுவதை செவிடன் காதில் ஊதிய சங்கு போல எல்லா அரசியல் தலைவரும் கைவிட்டு ஜனாதிபதியே கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் இந்திய மீனவர்கள் 22 பேருக்காகவும் வெறுமனே இந்தியாவில் உள்ள ஒரு அமைச்சு கூறியதற்கு அமைவாகவும் உடனடியாக எவ்வித கால தாமதம் இன்றி குறித்த மீனவர்கள் விடுவிக்கப்படுவதாக இருந்தால் கடந்த 15 வருடங்களாக நாங்கள் குரல் கொடுத்து , கத்தி வருகிறது எல்லாம் இலங்கையில் இருக்கின்ற நாங்கள் எல்லாம் மந்தைகளா?.
வெறும் சத்தமிடும் ஒரு தவளைகளாக இருக்கிறோம் என்பதை தான் இன்று கூறக்கூடியதாக இருக்கிறது.
ஜனாதிபதி இந்திய மீனவர்கள் 22 பேரையும் விடுவித்தது அவரின் நிலைப்பாடாக இருந்தால் எங்களால் சொல்லப்படுகின்ற விடயத்தையும் அல்லது எங்களால் முன்வைக்கப் படுகின்ற இலங்கையில் நாங்கள் முன்வைக்கின்ற மீனவர்கள் நலன் சார்ந்த விடயங்களையும் அவர் கவனத்தில் எடுக்க வேண்டும்.
வேறு நாட்டிற்காக இலங்கையின் சட்டத்தை விட்டுக் கொடுத்து செயல்படும் ஜனாதிபதி எங்கள் நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த கேட்டுக் கொண்டால் அதை செவி சாய்க்காமல் இருப்பது மீனவர்களுக்கு செய்கின்ற பெரிய துரோகம்.
இந்த நல்லிணக்கம் என்ற போர்வையில் இந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதை ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தால் இலங்கையில் இருந்து சென்றிருக்கின்ற எமது மீனவர்களின் படகுகள் வட பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட படகுகள் அங்கு இருக்கின்றன.
அதை அவர்கள் நல்லிணைக்கு அடிப்படையில் விடுவிக்க கூறியிருக்க முடியும். அல்லது தென் பகுதியில் உள்ள எமது மீனவர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு அங்கு சிறைகளில் வாடுகிறார்கள்.அவர்களையும் விடுவிப்பதற்கு ஜனாதிபதி இனியாவது முயற்சி எடுக்க வேண்டும்.
நல்லிணக்கம் என்ற போர்வையில் ஒன்றை கை நீட்டி உள்ளார். அதற்கு இந்தியாவிடம் இலங்கை மாற்றீடாக கோரிக்கை விடுத்தால் செய்யுமா என்பதை இந்த வேலையில் நாங்கள் கேட்டுக்கொள்ளுகின்றோம்.வெறுமனே ஒரு நாட்டிற்கு தாரை வார் ப்பதற்காக இந்த கடற்பரப்பு உள்ளதா?என்ற கேள்வி எழுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது மன்னார் மாவட்ட மீனவ சமாசத்தின் தலைவர் மரியதாஸ் குரூஸ் கலந்துகொண்டு தனது கருத்தை முன் வைத்தார்.