எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘ஆளண்டாப்பட்சி’ நாவலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மண்ணோடு இயைந்த மொழிவழக்கைக் கொண்டு எழுதும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘ஆளண்டாப்பட்சி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான பயர் பேர்டு ( ‘Fire Bird’) , இலக்கியத்துக்கான ஜேசிபி எனும் உயரிய விருதை வென்றிருப்பது அறிந்து மகிழ்கிறேன். பெருமாள் முருகனுக்கும், தேர்ந்த மொழிபெயர்ப்பால் ஆளண்டாப்பட்சியின் வாசகப் பரப்பை விரியச் செய்த ஜனனி கண்ணன் அவர்களுக்கும் பாராட்டுகள்!” என பதிவிட்டுள்ளார்.
பெருமாள் முருகனின் ‘ஆளண்டாப்பட்சி’ நாவலை ஜனனி கண்ணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இதனை பென்குயின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நாவலுக்கு இலக்கியத்துக்கான ஜேசிபி விருது கிடைத்துள்ளது. புலம்பெயர்ந்து வாழும் விவசாயக் குடும்பம் ஒன்றின் வாழ்வை இந்த நாவல் சித்தரிப்பது குறிப்பிடத்தக்கது.