ராஜஸ்தான் மாநிலம் வல்லாப்நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாம் ஏழைகளுக்கு உதவும்போது, ஒவ்வொரு திட்டத்திலும் பா.ஜனதா கோடீஸ்வரர்களுக்கு உதவுகிறது. அவர்கள் ஒரு அணி. அதானி பிக்பாக்கெட் அடிக்கும்போது, மக்களின் கவனத்தை திசைதிருப்புவதுதான் மோடியின் வேலை.
சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டின் எக்ஸ்–ரே. அதை செய்ய வேண்டியது அவசியம். பழங்குடியினரின் உரிமையை காங்கிரஸ் கட்சி பாதுகாக்கும். பிரதமர் அவர் ஓபிசி என்று அழைத்துக் கொள்கிறார். ஆனால் நான் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசும்போது, அவர், இந்தியாவில் ஏழை என்ற ஒரே சாதிதான் உள்ளது என்கிறார்.
நாட்டில் ஏழை என்ற ஒரே சாதிதான் உள்ளது என்று பிரதமர் சொல்கிறார். ஆனால் அதானி, அம்பானி போன்ற கோடிஸ்வரர்கள் என்ற மற்றொரு சாதி அங்கே உள்ளது.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது. அதன் விவரஞ் வருமாறு:-
“விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். சுவாமிநாதன் அறிக்கையின்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். காங்கிரஸ் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதில் 4 லட்சம் வேலை அரசு செக்டாரில் ஏற்படுத்தப்படும்.
பஞ்சாயத்து அளவிலான ஆள்சேர்ப்பு திட்டம் கொண்டு வரப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
ராஜஸ்தானின் பொருளாதாரம் இந்த ஆண்டு இறுதியில் 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இதனை 2030-க்குள் 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதே இலக்கு.”
மேற்கண்ட அம்சங்கள் இடம் பிடித்துள்ளன.