“ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றினால்தான், அனைவருக்கும் கல்வி, உயர் கல்வி என்ற இலக்கை மாநிலங்களை எட்ட முடியும். நான் தமிழகத்துக்காக மட்டும் இதைக் கூறவில்லை, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் கூறுகிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று (நவ 21) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இசையுடன் தொடர்பு
“இசைக்கும், என் குடும்பத்துக்கும் நெருக்கமான உறவு உண்டு. என்னுடைய தாத்தா முத்துவேலர் பாட்டு எழுதுவதில் மட்டுமல்ல, பாட்டு பாடுவதிலும் வல்லவர். அதேபோலதான், தலைவர் கலைஞரும் கவிதைகள் மட்டுமல்ல, நிறைய சினிமா பாடல்களை கூட எழுதி இருக்கிறார். அவர் பாட்டு பாடுவது இல்லையே தவிர, அனைத்து இசை நுணுக்கங்களும் அவருக்கு நன்றாக தெரியும். இசையை கேட்டவுடனே, அதில் சரி எது, தவறு எது என்று சொல்லிவிடுவார். அந்த அளவுக்கு வல்லமை பெற்றிருந்தார்.
அடுத்து, ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ உள்ளிட்ட பாடல்களை பாடியது என்னுடைய மாமா ‘தமிழிசைச் சித்தர்’ சிதம்பரம் ஜெயராமன். அந்த வகையில் எனக்கு இசையோடு நெருங்கிய உறவு இருக்கிறது.
முதல்வரே வேந்தர்
இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை, இந்தப் பல்கலைக்கழகத்துக்குத்தான் உண்டு. முழுக்க முழுக்க மாநில அரசின் நிதி உதவியும் செயல்படும் பல்கலைக்கழகமாக இந்த பல்கலைக் கழகம் இருக்கிறது.
அதைவிட சிறப்பு என்னவென்றால், இந்தப் பல்கலைக் கழகத்துக்குத்தான், மாநிலத்தை ஆளுகின்ற முதல்வரே வேந்தராக இருக்கின்ற உரிமை இருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வரான நான் இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இருப்பதால்தான் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கின்ற வகையில் இது போன்ற முடிவுகளை எடுக்கமுடிகிறது. அதனால் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் முதல்வரே இருக்க வேண்டும் என்று நாம் சொல்கிறோம். அதற்காக சட்ட முன்வடிவுகளையும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறோம்.
நல்ல செய்தி வரும்
இது தொடர்பான சர்ச்சைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகின்றது. நல்ல செய்தி வரும். வரும் என்று எதிர்பார்ப்போம். வரவேண்டும் என்று எதிர்போர்ப்போம்.
செய்திகளில் பார்த்திருப்பீர்கள், நாளிதழில் படித்திருப்பீர்கள். மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற வகையில், நேற்றைய தினம், நீதிபதிகள் கருத்துக்களை அதில் சொல்லியிருக்கிறார்கள்.
மாநிலப்பட்டியலில் கல்வி
அதுபோல், ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும் கல்வி மானிய பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும். இப்படி மாற்றினால்தான் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் உயர்கல்வி என்ற இலக்கை மாநிலங்கள் எட்டமுடியும்.
நான் தமிழ்நாட்டுக்காக மட்டும் இப்படி சொல்லவில்லை. இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களை சேர்த்துத்தான் சொல்கிறேன். நான் அடிக்கடி சொல்வதுபோல, கல்வி தான் ஒருவருடைய நியாயமான சொத்து. அந்த கல்வி எல்லோருக்கும் கிடைக்கவேண்டும். அதற்கு எந்த தடையும் இருக்க கூடாது என்பதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை.”
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.