ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 156 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவ.,25ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இது குறித்து அசோக் கெலாட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்: வழக்கமாக ராஜஸ்தானில் நடைபெறும் ஒவ்வொரு சட்டசபை தேர்தலின் போதும் ஆட்சி மாறுவது வழக்கம். ஆனால், இம்முறை அவ்வாறு ஆட்சி மாற்றம் ஏற்படாது. ஏனெனில், காங்கிரஸ் அரசு தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
இந்த தேர்தலில், 156 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும். பொருளாதார குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை அவசியம். வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சட்டப்படியான தங்கள் கடமைகளைச் செய்தால்தான் பொருளாதாரக் குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும். தேர்தல் முடிந்த பிறகு முதல்வராக தொடர்வீர்களா என்று கேட்கிறீர்கள்.
தேர்தலுக்குப் பிறகு கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அது தான் எனது பணி. எனது எதிர்காலப் பணியை நான் திட்டமிடுவது கிடையாது. கட்சி மேலிடம் சொல்வதைச் செய்வேன். இவ்வாறு கெலாட் கூறினார்.