தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 தினங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அடுத்த 3 தினங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், சென்னை புறநகரில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து, நவம்பர் 26 ஆம் தேதி தெற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே, நவம்பர் 26 ஆம் தேதி மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார்.