சசிகுமார் இயக்கத்தில் விரைவில் தொடங்கப்பட இருந்த குற்றப்பரம்பரை இணைய தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவர்கள் என குறிப்பிட்ட சாதியினரை அடையாளப்படுத்தி, அவர்களை காவல்துறையின் கண்காணிப்பில் வைத்திருக்கும் அடக்குமுறை சட்டத்தை ஆங்கிலேயே அரசு நடைமுறையில் வைத்திருந்தது. குற்றப்பரம்பரையினர் என அழைக்கப்பட்ட அம்மக்கள் தங்களின் உரிமைகளுக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினர்.
ஆங்கிலேயர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர். கதாசிரியர் இரத்னகுமார் தொகுத்திருந்த இந்த வரலாறை அடிப்படையாக வைத்து பாரதிராஜாவும், வேல ராமமூர்த்தி குற்றப்பரம்பரையினர் குறித்து எழுதிய கதையை வைத்து பாலாவும் படம் இயக்கப் போவதாக பல வருடங்கள் முன்பு அறிவித்தனர். பாரதிராஜா தேனியில் பிரமாண்ட தொடக்கவிழா நடத்தினார். பெருங்காமநல்லூரில் படத்தின் பூஜை போடப்பட்டது. ஆனால், அதன் பிறகு படம் முன்னோக்கி நகரவில்லை. பாலாவும் தனது குற்றப்பரம்பரை முயற்சியை கைவிட்டார்.