ராஜு முருகனின் எழுத்திலும், திரை ஆக்கங்களிலும் சமூகம் மீதான அக்கறை வெளிப்படும். அவர் தயாரித்திருக்கும் பராரி திரைப்படமும் சமூக அரசியலை பேசும் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. பஞ்சம் பிழைக்க ஊர் ஊராக திரிவதை, பராரியாக திரிவது என்பார்கள். அப்படி வாழ்க்கைக்காக அலைந்து திரிகிறவர்களை குறிக்கும் சொல் பராரி. இந்தத் தலைப்பே விளிம்புநிலை மனிதர்கள் குறித்து பேசும் படைப்பு இது என்பதை சொல்லிவிடுகிறது.
ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி படத்தை எழுதி, இயக்கியுள்ளார். படத்தின் நாயகனாக ஹரிசங்கர் நடித்துள்ளார். அவரைத் தவிர்த்து நாயகி சங்கீதா கல்யாண் உள்பட பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். அதனால், ஆறு மாதங்கள் முறையான நடிப்புப் பயிற்சி அளித்து அதன் பிறகு படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். ராஜு முருகன் எஸ்பி சினிமாஸுடன் இணைந்து பராரியை தயாரித்துள்ளார்.