பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்) நிறுவனத்தில் பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, தேஜஸ் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். கர்நாடக மாநிலம், பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு எச்.ஏ. எல். எனப்படும் , பாதுகாப்பு பொதுத்துறை மற்றும் விண்வெளி நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் செயல்படுகிறது. இந்நிறுவனம், ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், இலகு ரக ஹெலிகாப்டர்கள், இலகு ரக போர் விமானங்கள் ஆகியவற்றை தயாரித்து வடிவமைத்து வருகிறது. இந்நிறுவனத்திடம் எஸ்.யூ 30 எம்.கே. ஐ. ரக போர் விமானங்களை வாங்கிட மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
இது தொடர்பாக அங்கு நடைபெற்று வரும் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய இன்று (நவ.25) காலை பிரதமர் மோடி பெங்களூரு சென்றார். இதனை தொடர்ந்து ஆய்வுகளுக்கு பின், பிரதமர் மோடி இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். இப்பயணம் பற்றி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு நெகிழ்ந்தார். அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
தேஜஸ் விமான பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நமது உள்நாட்டு உற்பத்தி திறன்கள் மீதான எனது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. மேலும் நமது சுயசார்பு திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.