சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் அந்த பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலோர டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. பின்னர் இரவு பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. சுமார் 1.30 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் மின்தடையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். தொடர்ந்து பெய்த கனமழையால் அந்த பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.