காந்தாரா படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் காந்தாரா படத்தின் 2 ஆம் பாகத்தை தயாரிக்கவுள்ளது. காந்தாரா பாகம் 1 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல்காட்சி வெளியானது சத்தமில்லாமல் வெளிவந்து பட்டித்தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய திரைப்படம் காந்தாரா. ஊர்க்காவல் தெய்வத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அப்படம் கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் வசூலை வாரிக்குவித்தது.
ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் கடந்த ஆண்டு தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. மொத்தமே அதிகபட்சமாக ரூ. 16 கோடி செலவில் இந்த படத்தை தயாரித்திருந்தனர். படத்தின் திரைக்கதை காட்சியமைப்புகள், சுவாரசியமான காட்சிகள், பின்னணி இசை உள்ளிட்டவற்றால் காந்தாரா ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியிலும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. அதன்பின்னர் இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.
இதற்கான பணிகளை தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் தரப்பு மேற்கொண்டுவந்த நிலையில், தற்போது காந்தாரா 2 படத்தின் முதல்காட்சி வெளியானது. இந்த படத்திற்கு காந்தாரா 2 என்று பெயர் வைக்காமல் காந்தாரா பாகம் 1 என்று பெயர் வைத்துள்ளனர். முதல் பாகத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளதால் இந்த பாகமும் ரசிகர்களை அதிகம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.ஜி.எஃப். முதல் மற்றும் 2ஆம் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம்தான் காந்தாரா 2 படத்தை தயாரிக்கிறது.