உத்தராகண்ட் மாநிலத்தில் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 16 ஆவது நாளை எட்டியுள்ளது.
கடந்த 12 ஆம் தேதி உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கத்தில் பணிகளின்போது மண்சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கி கொண்டனர், அவர்களை மீட்கும் நடவடிக்கையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு தொடர்ந்து திரவ உணவுகள் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. சுரங்கத்தின் குறுக்கே விழுந்த இடிபாடுகளை அகற்ற, பக்கவாட்டில் கிடைமட்டமாக துளையிட பிரமாண்ட ஆகர் இயந்திரம் பயன்படுத்தப்பட்ட நிலையில், அதன் விசிறிகள் உடைந்து சேதமடைந்தன. இதனால், மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று சுரங்கத்தின் மேல் மலைப்பகுதியில் செங்குத்தாக துளையிடும் பணிகள் தொடங்கப்பட்டன. முதல் நாளில் 20 மீட்டர் அளவுக்கு செங்குத்தாக துளையிடப்பட்டுள்ளது. இன்னும் 86 மீட்டர் துளையிடப்பட வேண்டியுள்ளது. ஆகர் இயந்திரத்தின் உடைந்த பாகங்களை சரிசெய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், செங்குத்தாக துளையிடும் பணிகள் இதே வேகத்தில் நடந்தால் 24 மணிநேரத்தில் மீட்புப்பணிகள் இறுதிகட்டத்தை எட்டும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. மீட்புப்பணிகளுக்கு உதவுவதற்காக ராணுவ வீரர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். 8 அங்குல குழாய் மற்றும் 1.2 மீட்டர் விட்டம் கொண்ட குழாய் மூலம் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணி நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆகர் இயந்திரத்தில் உடைந்து
சிக்கிக்கொண்ட பிளேடுகளை வெளியில் இருந்து சென்ற பணியாளர்கள் சிறிது சிறுதாக வெட்டி அகற்றி வருகின்றனர். மொத்தம் கைவசம் 6 திட்டங்கள் உள்ளதாக கூறிய மீட்புப்படையினர். 180 மீட்டருக்கு பிரத்யேகமாக வேறொரு பக்கம் துளையிடும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. 180 மீட்டர் துளையிடும் பணிகள் முழுமையாக முடிவடைய 12 முதல் 14 நாட்கள் வரை கூட ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிகளுக்காக தெலங்கானாவில் இருந்து வெட்டும் கருவிகளும், ராணுவ பொறியாளர்களும் சில்க்யாரா சென்றுள்ளனர். தீபாவளியன்று சுரங்கத்தில் பணிக்காக சென்ற 41 பணியாளர்களும் கிறிஸ்துமஸ்க்குள்ளாவது மீட்கப்படுவார்களா என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் உறவினர்கள்.