இயக்குநர் அமீருக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ள பாடலாசிரியர் சினேகன், ஒருவரை விமர்சிப்பதற்கு அறம் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநரும் நடிகருமான அமீர், நேர்காணல் ஒன்றில், “கார்த்தியின் 25-வது பட நிகழ்வுக்கு என்னை யாரும் முறையாக அழைக்கவில்லை. மூன்றாம் நபரை விட்டு நிகழ்ச்சிக்கு அழைத்தால், வரக் கூடிய ஆள் நான் இல்லை. சம்பந்தப்பட்டவர் என்னை அழைக்கவில்லை. அதைவிட, பருத்திவீரன் படத்தால் தனக்கு மிகப்பெரிய மன உளைச்சலும் பொருளாதாரரீதியாக இழப்பும் ஏற்பட்டது” எனக் கூறியிருந்தது சர்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளித்து பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, என் பணத்தில் தான் சினிமாவை எப்படி எடுக்க வேண்டும் என்பதையே அமீர் கற்றுக்கொண்டார். அந்த அளவிற்கு பருத்திவீரனில் என்னை ஏமாற்றினார். அவரைப் பொறுத்துவரை உழைத்து சம்பாதிக்கக் கூடாது. யாராவது சிக்கினால் அவர்களிடம் திருட வேண்டும் என கடுமையாக விமரித்தார். இந்த விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது பாடலாசிரியர் சினேகனும் தனது ஆதரவை அமீருக்கு தெரிவித்துள்ளார்.