முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. வி.பி.சிங் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
உத்தரபிரதேச முன்னாள் முதல்-அமைச்சர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, வி.பி.சிங் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கிருந்த உருவப் படத்துக்கும் மலர் தூவி வணங்கினார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நானும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கும் 2 முறை சந்தித்துள்ளோம். முதல் சந்திப்பு 1988-ம் ஆண்டு தேசிய முன்னணியின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. அப்போது இளைஞரணி சார்பில் மாபெரும் ஊர்வலத்தை நான்தான் தலைமை தாங்கி நடத்தி வந்தேன். கிட்டத்தட்ட 2 லட்சம் இளைஞர்கள் பங்கேற்ற அந்த ஊர்வலத்தை இதே அண்ணா சாலையில் காயிதே மில்லத் கல்லூரி பக்கத்தில் மேடை அமைத்து மாலையில் தொடங்கி இரவு வரை வியந்தபடி பார்த்து வாழ்த்தினார் வி.பி.சிங்.
அப்போது நான் அவரிடம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த சந்திப்பு அவர் பிரதமர் ஆன போது டில்லிக்கு சென்ற எம்.எல்.ஏ.க்கள் குழுவில் நானும் இருந்தேன். அப்போது என்னை அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது வி.பி.சிங் என்னிடம் இவரை எப்படி மறக்க முடியும்? இவர்தான் சென்னையில் இளைஞர் படையை அணிவகுத்து நடத்தினார் என்று மறக்காமல் என்னை பாராட்டினார். அந்த பாராட்டு என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு. இன்றைக்கு நான் முதலமைச்சராக பொறுப்பேற்று அவருக்கு சிலை திறந்து வைத்துள்ளேன் என்றால் இதைவிட என்ன பெருமை வேண்டும்? இந்தியா முழுவதும் பரவி உள்ள சமூக நீதி குடும்பத்தை சார்ந்தவர்கள் நாங்கள். வி.பி.சிங்குக்கு சிலை வைப்பதின் மூலம் அவரது புகழ் உயருது. நாம் அவருக்கு காட்ட வேண்டிய நன்றியை காட்டி உள்ளோம். சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அழைக்கப்படும் சமூகத்துக்கு மத்திய அரசு பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற வி.பி.மண்டல் பரிந்துரையை அமல்படுத்திய சமூக நீதி காவலர்தான் வி.பி.சிங். மக்கள் தொகை கணக்கெடுப்பை, அந்த கணக்கெடுப்போடு ஜாதி வாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும்.. இந்தியா முழுமைக்கும் வாழும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மை விளிம்பு நிலை மக்களுடைய உயர்வுக்கான அரசியல் செயல் திட்டங்களை அரசியல் செயல் திட்டங்களாக மாற்றி அமைக்க இன்றைக்கு உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.