மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வாக்கு எந்திரம் இருக்கும் மையத்தை யாரும் எளிதாக நெருங்கி விட முடியாது. உயர் அதிகாரிகள் இல்லாமல் திறக்க முடியாது.
மத்திய பிரதேசத்தில் 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற போதிலும், வருகிற 3-ந்தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதனால் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக கருதி காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினரும் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.
இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாட்டுகளையும் மீறி, பாலகாட் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்கு பெட்டி வைத்திருக்கும் அறையில் பலர் தபால் வாக்குகளை கட்டு கட்டுகளாக பிரித்து வைப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பாகியுள்ளது.
இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள காங்கிரஸ், “இது மிகவும் முக்கியமான விஷயம். குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேணடும். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. அதில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில் இந்தப் புகாரையொட்டி, தாசில்தார் அந்தஸ்தில் உள்ள சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியான ஹிம்மத்சிங் என்பவரை தேர்தல் ஆணையம் சஸ்பெண்டு செய்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அதன்பின் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, ஜோதிராதித்யா சிந்தியா 20 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா ஆட்சி அமைத்தது.