குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான தாரா என்ற பெண் யானை இறந்தது. ஆசியாவிலேயே வயதான இந்த யானைக்கு 97 வயது ஆகிறது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் ஏராளமான யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இவை அனைத்தும் கோவிலுக்கு அருகே உள்ள ஒரு இடத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 97 வயதான தாரா என்ற யானை இருந்தது. ஆசியாவிலேயே வயதான யானையாக இது கருதப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதற்கு “பாட்டி யானை” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
ஒரு தனியார் சர்க்கஸ் நிறுவனத்தில் இருந்த இந்த யானையை அதன் உரிமையாளரான தாமோதரன் என்பவர் கடந்த 1957 ம் ஆண்டு குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக குருவாயூர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் தாரா என்ற இந்த யானையும் கலந்து கொண்டுள்ளது.
வயது மூப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக இதற்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று (நவ 28) இரவு தாரா யானை இறந்தது. இது குறித்து அறிந்ததும் அந்த பகுதியினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். தாராவின் உடல் கோடநாட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.