தமிழக மாணவ, மாணவிகள் உலகம் எங்கும் சாதிக்க வேண்டும் என்பதே என்பதே என் கனவு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் வஞ்சிப்பாளையம் தீரன் சின்னமலை மகளிர் கல்லூரி புதிய கட்டட திறப்பு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உடல்நிலையை கருத்தில் கொண்டு காணொலிக்காட்சி மூலம் கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்துள்ளேன். கொங்கு பகுதியின் வளர்ச்சியில் திமுக அரசு தனி கவனம் செலுத்துவதை தாங்கள் அறிவீர்கள். தீரன் சின்னமலை பெயரை சொன்னாலே உணர்ச்சியும், எழுச்சியும் ஏற்படும். திமுக ஆட்சியில் தான் இந்த பகுதியில் 2 மகளிர் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. நேரில் வந்து கல்லூரியை திறக்க விருப்பப்பட்டேன். ஆனால் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. பெண்கள் அனைத்து துறைகளிலும் ஏற்றம் காண வேண்டும். அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பெறும் மாணவிகளுக்கு ரூ.ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குகிறோம். அ.தி.மு.க.
ஆட்சியில் மேற்கு மண்டலத்தில் 9 அமைச்சர்கள் இருந்தும் கல்லூரி கட்ட நிலம் ஒதுக்கப்படவில்லை. கல்லூரி கட்டுவதற்கான தடையை திமுக அரசு நீக்கியது. கல்வி, வேலைவாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் உயர்க்கல்வி கற்க வேண்டும். தமிழகத்தில் திரும்பும் இடமெல்லாம் கல்லூரிகள் உள்ளதால் தான் வீட்டுக்கொரு பட்டதாரி உள்ளனர். பள்ளிக்கல்லி, உயர்கல்வியை ஊக்குவிக்க காமராஜர், கருணாநிதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர். பெரும் போராட்டங்கள் மூலமாகத்தான் அனைவருக்கும் கல்வி கிடைத்திருக்கிறது. சமூகசீர்த்திருத்தவாதிகள் தான் கல்விப்புரட்சிக்கு காரணமாக இருந்தனர். தமிழக மாணவ, மாணவிகள் உலகெங்கும் சாதிக்க வேண்டும் என்பதே என்பதே என் கனவு. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.