தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 21-ந்தேதி தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய இயல்பான அளவு பருவமழை பெய்யவில்லை. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் போதுமான அளவு மழை பொழிவு இல்லை. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் 1-ந் தேதி முதல் நேற்று வரை 32 செ.மீ. மழை பெய்து உள்ளது. இது இயல்பை விட 8 சதவீதம் குறைவாகும்.
பருவமழை காலத்தில் இதுவரையில் ஒரே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி மட்டுமே உருவாகி மழையை கொடுத்து உள்ளது. காற்றின் மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சியால் பருவமழை பெய்து வந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 27-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காலை 5.30 மணி நிலவரப்படி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அதன்பிறகு இது வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4-ந்தேதி அதிகாலை தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் படிப்படியாக புயலாக வலுவடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புதிதாக உருவாகும் புயலுக்கு ‘மிச்சாங் புயல்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் 4-ந்தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே நோக்கி வந்தடையும். வட தமிழகத்தை நோக்கி புயல் வருவதை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.
புயலின் கூர்முனை சென்னையை நோக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கடந்த 2-ந்தேதி புயல் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒருநாள் தாமதமாக 3-ந்தேதி உருவாகிறது. புயலையொட்டி வட தமிழகம் கடலோர பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.