கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு சிறுமியை கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் மாவட்டத்தில் அடுத்தடுத்த கடத்தல் சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. கேரளாவில் கொல்லம் மாவட்டம் உய்யூர் பகுதியில் சேர்ந்த 6 வயது சிறுமி அபிகெய்ல் சாரா ரெஜி என்பவர், கடந்த 27 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். இதையடுத்து, காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையறிந்த கடத்தல் கும்பல், பெண் ஒருவர் மூலம் அந்த சிறுமியை அங்குள்ள ஆசிரம மைதானத்தில் விட்டுச் சென்றார்.
கடத்தப்பட்ட குழந்தை அபிகெய்ல், 21 மணி நேரத்தில் மீட்கப்பட்ட நிலையில், அவரை கடத்தியவர்கள் குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பான பேச்சு அடங்குவதற்குள், கொல்லம் அருகே கொட்டாரக்கரை வாளகம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியை சிலர் கடத்த முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர், மீண்டும் அருகில் உள்ள டியூசன் மையத்திற்கு சென்றார். அப்போது நீலநிற ஆம்னி காரில் வந்த இருவர் சிறுமியை கடத்திச் செல்ல முயன்றனர். ஆனால், தான் கடத்தப்படுவதை உணர்ந்த சிறுமி, சுதாகரித்துக் கொண்டு கூச்சல் போட்டார். இதனால், அச்சமடைந்த கடத்தல்காரர்கள் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர். இதில், சிறு காயத்துடன் நூலிழையில் சிறுமி தப்பினார்.