அமலாக்கத்துறையையும், ஆளுநரையும் சட்டப் போராட்டம் மூலமாக எதிர்ப்போம் என்று முதலமைச்சர் தெரிவித்ததே எனது பிறந்தநாள் பரிசு என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தனது 91-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு கி.வீரமணியின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், தனது சுயசரிதையான “உங்களில் ஒருவன்” புத்தகத்தை ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூலை வழங்கி வாழ்த்து பெற்றார். இதையடுத்து கி.வீரமணி தனது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “பெரியாரை உலகமயமாக்க வேண்டும். மனிதகுலம் எங்கெல்லாம் அவதிப்படுகிறதோ அங்கு அவர்களுக்கு ஒரு புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுப்பதாதே திராவிடம்.
திராவிட இந்தியாவிற்கும், இந்துத்துவ இந்தியாவிற்கும் நடைபெறும் கொள்கை போராட்டத்திற்கு அனைவரும் தயாராக வேண்டும். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக சட்ட மசோதாக்களை உச்சநீதிமன்றம் கூறியும் நிறைவேற்றாமல் நிறுத்தி வைப்பதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை. ஆளுநர் இதை ஏட்டிக்கு போட்டியாக செய்கிறாரா? அல்லது அவருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தைப் பற்றி தெரியவில்லையா? என்பது புரியவில்லை. அமலாக்கத்துறையில் உள்ளவர்கள் எல்லாம் தூய்மையானவர்கள் அல்ல. மதுரையில் அமலாக்கத்துறையினர் 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். திராவிட ஆட்சி சட்டத்தின் மூலமாக நடைபெறும் ஆட்சி. அமலாக்கத் துறையையும், ஆளுநரையும் சட்டப் போராட்டம் மூலமாக எதிர்ப்போம் என்று முதலமைச்சர் தெரிவித்ததே எனது பிறந்தநாள் பரிசு” என்று தெரிவித்தார்.