மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னைக் கூட மிரட்டின என்று சபாநாயகர் அப்பாவு பரபரப்பான குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை வண்ணாரப்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைத்தார். தொடர்ந்து முகாமில் வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழக அரசு ஆண்டுக்கு மூன்று முறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தி படித்த இளைஞர்கள் இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
“தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி சிறப்பாக செயல்படுகின்றனர் மத்திய புலனாய்வு அமைப்புகளான வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவை, மத்திய அரசின் மனநிலையைத் தெரிந்து கொண்டு பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களுக்கு குறி வைத்து அவர்களுக்கு முதலில் நூல் விடுவது, பிறகு இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டி பேசுவது, குறிப்பிட்ட தொகையை வாங்குவது… இப்படித்தான் நடந்நு வருகிறது.
என்னிடமும் கூட கடந்த மூன்று மாதமாக இடைத்தரகர்கள் பல பேர் பேசினார்கள். ‘நான் சரியாக இருக்கிறேன் என்ன வந்தாலும் மேல இருக்கிறவர் பார்த்துக் கொள்ளுவார்’ என்றேன். ஒன்றிய அரசு உங்களிடம் பிரச்சனை செய்யச் சொல்லி இருக்கிறார்கள் என இடைத்தரகர்கள் என்னிடம் பேசினார்கள்
ஊரை விட்டு எல்லாம் போகச் சொன்னார்கள் செல்போன் எண்ணை மாற்றச் சொன்னார்கள். இப்படி எல்லாம் எனக்கு கடந்த மூன்று மாத காலமாக அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
என்னைப் போன்று எல்லோருக்கும் மத்திய அரசின் நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டல் விடுக்கின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சாசனம் 91 ன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆறு வாரங்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.
ஆனால் ஆளுநர் அவர்கள் எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ எவ்வளவு கிடப்பில் போட முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்.
உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆளுநர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.
மதச்சார்பின்மை நாடு என்று அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள நிலையில் தமிழக ஆளுநர் இது மதச்சார்புடைய நாடு என பேசி வருகிறார்.
இவ்வாறு சபாநாயகர் கூறினார்.
தமிழகத்தில் அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி இல்லை என்று அண்ணாமலை பேசிய விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது, ‘அண்ணாமலை அவரைக் குறித்து அவரே இந்த கருத்தைச் சொல்லி இருக்கிறாரா’ என்று சபாநாயகர் அப்பாவு கேட்டார்.
மேலும் அவர் கூறியதாவது:
மின்வாரியத்திற்கு நிலக்கரி வழங்கியதில் ரூ.800 கோடி அளவிற்கு நடைபெற்ற இழப்பு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் 25 லட்சம் கோடி அளவிற்கு 500 முதல் 1000 பெரும் நிறுவனங்கள் வாங்கிய கடனை ரைட் ஆப் ( கடன் கணக்கை நீக்கியுள்ளது) செய்துள்ளது மத்திய அரசு. ஆனால் விவசாயிகள் வாங்கிய கடனை இதுவரை தள்ளுபடி செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.