நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை வகையில் பேசிய வழக்கில், நடிகை த்ரிஷா தரப்பு விளக்கத்தை கேட்டு சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் பேச்சுக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் த்ரிஷா கண்டனம் தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நடிகை, நடிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராகவும், நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு காவல்துறை சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது. இதனைத்தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல்துறை 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பின் இந்த வழக்குகளில் ஆஜராகி வந்தார் நடிகர் மன்சூர் அலிகான். இதனைத்தொடர்ந்து “திரை நாயகி த்ரிஷாவே மன்னித்துவிடு” என மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். இதற்கு, நடிகை த்ரிஷா அவரது கீச்சக பக்கத்தில் ‘தவறு செய்வது மனிதம்; மன்னிப்பது தெய்வ குணம்’ என்னும் பழமொழியை குறிப்பிட்டு மன்சூரை அலிகானை மன்னித்துவிட்டதாக மறைமுகமாக கூறினார். இந்த சூழலில் நடிகர் மன்சூர் அலிகான் மீதான வழக்கில் நடிகை த்ரிஷாவிடம் விசாரணை நடத்தி, அவர் அளிக்கும் பதில்களின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக நடிகை த்ரிஷா தரப்பு விளக்கத்தை கேட்டு சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் த்ரிஷாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க நடிகை த்ரிஷாவிற்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
![மன்சூர் அலிகான் விவகாரம்: நடிகை த்ரிஷா தரப்பு விளக்கத்தை கேட்டு காவல்துறை கடிதம்](https://uthayannews.ca/wp-content/uploads/2023/11/Mansoor.jpg)