“தற்காலிக பின்னடைவில் இருந்து மீண்டெழுந்து, மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுவோம்” என்று 4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து வெளியிட்ட பதிவில், “தெலங்கானா மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மூன்று மாநிலங்களிலும் எங்கள் கட்சியின் செயல்பாடு ஏமாற்றம்தான் அளிக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இருந்தாலும், இந்த மூன்று மாநிலங்களிலும் மீண்டும் புத்துயிர் பெறுவோம். தற்காலிக பின்னடைவில் இருந்து மீண்டெழுந்து, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு இண்டியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தயாராகுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் டிச.6-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார்.