செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து 2800 கன அடியாக உள்ள நிலையில், பிற்பகல் 3000 கன அடியாக நீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் கணிசமான நீர்வரத்து இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரியாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு உடைய செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 3,256 மில்லியன் கன அடியாக உள்ளது.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்பொழுது நீர்வரத்து 2800 கன அடியாக உள்ளதால் 3000 கன அடியாக தண்ணீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில் தற்போது 20.74 அடி தண்ணீர் உள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.